கன்னியாகுமரியில் இயங்கிவரும் ஐ.ஆர்.இ.எல். (Indian Rare Earths Limited) நிறுவனம், கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோனாசைட் என்பது அணுசக்தி சட்டவிதிகளின்படி Prescribed Substance ஆகும். மோனாசைட் உள்ளடக்கிய கனிம படிமத்தை அகழ்வு செய்யவும், கையாள்வதற்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.எல்-க்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அமைய இருக்கும் மொத்தப் பரப்பளவான 1144.0618 ஹெக்டேரில் 353.4876 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட கடலோர மண்டலத்தின் கீழ் வருகிறது. சுமார் 59.88 மில்லியன் டன் அளவிலான அணுக் கனிமங்கள் வெட்டியெடுக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுரங்கக் குத்தகை மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன்கள் என்ற வீதத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மணவாசக்குறிச்சி ஆலைக்குத் தேவையான மூலப் பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்படும் என ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள 75 கடலோரக் கிராமங்களில் ஏறத்தாழ 50 கிராமங்கள் ஏற்கெனவே தாதுமணல் கொள்ளையால் பாதிப்படைந்துள்ளன. கடலோரங்களில் இருந்த மணற்குன்றுகள் அழிக்கப்பட்டதால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. மீன்வளம், நிலவளம் அழிந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்ற தாதுமணல் கொள்ளையால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அணுக்கனிமச் சுரங்கம் அனுமதிக்கப்பட்டால் பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயரக்கூடும்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து மனு அளித்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் அமைச்சருமான ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். "அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஓராண்டு கால நீட்டிப்பு அரசாணையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மக்களைப் பாதிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காக்கும் இந்தக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

