வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களால் அவதிக்குள்ளாகி, தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் திரும்பச்செய்யும் பணியில், சமீபத்தில் தனது முயற்சியால் மீட்டெடுக்கப்பட்ட தோழர்களின் இல்லங்களுக்கு நேற்றும் இன்றும் நேரில் சென்று அவர்களைச் சந்தித்ததாக துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.
முதலில், தமிழ்நாட்டிலிருந்து துபாய்க்கு எலக்ட்ரீஷியன் பணிக்காகச் சென்று, ஊதியம் வழங்காத நிறுவனத்தால் வீதிக்கு வந்து, உணவுக்கும் உறை விடத்துக்கும் கூட சிரமப்பட்ட விருதுநகர் மாவட்டம் கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தோழர்கள் அழகுராஜ் மற்றும் இராசாமணி ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று, அவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும், ஊர் மக்களுடனும் உரையாடினேன் என்றார்.
அதன் பின்னர், அதே துபாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்டம் வில்லிசேரி கிராமத்தைச் சேர்ந்த தோழர் பவுன்ராஜ் அவர்களின் இல்லத்திலும், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தோழர் கணேசன் அவர்களின் இல்லத்திலும் அவர்களையும் ஊர் மக்களையும் சந்தித்துப் பேசினேன்.
அப்போது அவர்கள் அனைவரும் ஒரே குரலில், "அந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்களுக்கு உணவு வழங்கி, தங்க இடம் ஏற்பாடு செய்து கொடுத்து, சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு, இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்று எங்கள் அனைவருக்கும் தற்காலிக பாஸ்போர்ட் வழங்கி மீட்டு தாயகம் அழைத்து வந்து குடும்பத்தினருடன் எங்களை சேர்த்து வைத்த உங்களுக்கு நன்றி" என்று கண்ணீர் மல்க கூறியது என் இப்பணியை நிறைவாக்கியது.
அதன் பிறகு, மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, எனது தொடர் முயற்சியால் மீட்டெடுக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்டம் நாரைகிணறு கிராமத்தைச் சேர்ந்த தோழர் பொன்னுதுரை, கொடியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் புதியவன், கடையநல்லூர் கண்ணணியபுரம் பகுதியைச் சேர்ந்த தோழர் தளபதி சுரேஷ் ஆகியோரின் இல்லத்திற்குச் சென்று, அவர்களையும் அவரின் குடும்பத்தினரையும், ஊர் மக்களையும் நேரில் சந்தித்து உரையாடினேன்.
தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததாகவும், நாங்கள் காப்பாற்றப்படுவோமோ என்ற நிலையில்தான் எங்கள் மக்களை காப்பாற்றி உள்ளீர்கள் என்று கூறிய அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். மேலும், தங்கள் கிராமங்களில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல ஆர்வமுள்ள இளைஞர்களிடம் இந்த அனுபவங்களைப் பகிர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன் என துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.

