12.06.2026 அன்று, ஓமன் நாட்டின் துக்கம் (Duqm) துறைமுகத்தில் Glory International நிறுவனக் கப்பலில் பணியில் இருந்தபோது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தகவல் கிடைத்ததும், நிஷாந்த் அவர்களின் உடலை தங்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் மூலம் ஹிஷாந்த் அவர்களின் மனைவி திருமதி சரோபின் அவர்கள் துரை வைகோ எம்.பி. அவர்களை அணுகினார்.
தகவல் அறிந்த உடன், 15.06.2026 அன்று மாண்புமிகு இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் தொடர்பு கொண்டு, ஓமன் நாட்டில் கப்பல் பணியில் உயிரிழந்த திரு. நிஷாந்த் அவர்களுடைய உடலை கண்ணியத்துடன் தாயகம் கொண்டுவர அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உதவுமாறு துரை வைகோ எம்.பி. கேட்டுக்கொண்டார்.
மீண்டும் 21.06.2026 அன்று வெளியுறவுத்துறை அதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, தாமதத்திற்கான காரணங்களை சரி செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, அவரது உடல் ஓமனிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, திருவனந்தபுரம் வந்தடைந்து, அங்கிருந்து அவர்களது இல்லம் சென்றடைந்தது.
இந்த துயரச் செய்தியை தன்னிடம் எடுத்து வந்து, உயிரிழந்த நிஷாந்த் அவர்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக நின்ற கழக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுக்கும், பிற இயக்கத் தோழர்களுக்கும் தனது நன்றியை துரை வைகோ எம்.பி. உரித்தாக்குவதாக தெரிவித்துள்ளார்.

