திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் ரயில் நிலையத்தில் 29.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது கண்டறியப்பட்டது. இதனை உடனடியாக மண் நிரப்பி சீரமைக்குமாறும், எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வகையில் தரை மட்டத்தை உயர்த்தி, சரியான சாய்வுடன் நிரந்தர தீர்வு ஏற்படுத்துமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை ஆய்வு செய்தார். கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததுடன், சுத்தமும் பராமரிப்பும் இல்லாதது கண்டறியப்பட்டது. அவற்றை உடனடியாக சுத்தம் செய்து, தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்யுமாறும், குவளை மற்றும் வாளிகளை உடனடியாக வழங்குமாறும் ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பயணிகள் காத்திருப்பு அறையில் பழுதான மற்றும் சுத்தமற்ற இருக்கைகள் இருப்பதை கண்டறிந்தார். அவற்றை அகற்றி புதிய இருக்கைகள் அமைக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும், நடைமேடை முழுவதும் பயணிகள் வசதிக்காக மேற்கூரை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதேபோல, ரயில் நிலைய நடைமேடையில் மழைநீர் தேங்காத வண்ணம் சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் பதிலளிக்கையில், வரவிருக்கும் ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தில் இதனை இணைத்து செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.
ஆய்வின்போது, ரயில் நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். மேலும், ரயில் நிலையத்தின் முன்புறத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் நிறைவில், ரயில் நிலையத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று துரை வைகோ எம்.பி. கூறினார்.

